கைவிரி கோலமாய்
இன்று எங்கள் காவிரி.
அவளின் மடியெங்கும்
கானலின் நீரோட்டம்.
ஈழ தமிழச்சியாய்
நிர்மூலமாகி நிற்கிறாள்.
ரகசியங்கள் அழிந்து
ராப்பிச்சை கேட்கிறாள்.
ஆவணி தாண்டியும் இனிக்கவில்லை
ஆடி பெருக்கு விழா.
நீருக்கடியில் நினைவிழக்கும் இன்பம்
வாய்க்கவில்லை என் தம்பிகளுக்கு...
முதிர்க்கன்னி காதலாய்
ஏங்கி நிற்கிறது வயல்வெளி.
பருவம் தப்பியாவது
பெய்யுமா பருவமழை என்று...
மழைநீரை தேக்கி வைக்கும்
மணல்வெளியும் மிஞ்சவில்லை
எச்சத்தையும் விழுங்கும்
நரிகள் கூட்டத்தால்...
நாற்றுகளுக்கிடையே நடனமாடும்
பருவ காற்று தேடி செல்கிறது
இழந்த சலங்கை ஒன்றை தேடி
குடகு மழை நோக்கி...
பிருந்தாவன் பூங்காவின்
எச்சத்தையாவது தாருங்கள்
எங்கள் பசிபூங்காவினை
கொஞ்சம் இளைப்பாற்றிட...
என்று வருவாய் எங்கள் தேவி...
No comments:
Post a Comment