Tuesday, 30 October 2012

சாமத்து காமம்


ஆடுமாடு அச போட
ராத்திரியும் நட போட
வெண்ணிலவும் தொண தேட
சழுதியில நமது கூடல்.

சந்திரனும் சாமத்துல
மேகத்தோடு காமத்துல,
வலிக்காம தேகத்துல
வழிதேடும் விரல்போல

சத்தம் கித்தம் போடாம
முத்தம் நித்தம் நீ கொடுக்க
சித்தம் பித்தம் தெளியாம
கக்கத்துல நான் கெடக்க

வெட்கம் எல்லாம் ஓடிபோயி
வெப்பம் மட்டும் கூடிபோயி
சொர்க்கம் இது தானானு
சொக்கி போன விழிதேடும்.

விடிஞ்ச சேதி தெரியாம
இமை ரெண்டும் பிரியாம
நடந்தது என்னானு கேட்டா - புரியாம
புரிய வைக்கும் சாமத்து காமம்.

Sunday, 28 October 2012

கரும்பலகை




அறிவிற்கான வழித்தடம்.
தலைவர்களின் விதைப்பிடம்.
தீண்டாமையை தொட்டொழித்த திருத்தலம்.
சாதியை புறம் தள்ளிய போர்க்களம்.
ஆத்திகத்தையும் சொல்லித்தந்த பகுத்தறிவு களம்.

நல்லதொரு விஜயதசமி நாளில்
நண்பர்களுக்கு மிட்டாய் வழங்கி தொடங்கப்பட்டது
எனக்கும் கரும்பலகைக்குமான நட்பு.

அ – அம்மா, அன்பழகி
என என் சின்ன கரும்பலகையில்
எழுதி நீட்டினேன்.
உள்ளம் பூரித்து
தினம் ஒரு முத்தத்தையும்,
வலிக்காத கன்னக்கடிகளையும்
பரிசாய் தந்தாள்.

அழையா விருந்தாளியாய்
அறிவொளி இயக்கத்தில்
இணைந்த போது,
என்னை ஆசானாக்கி
அழகு பார்த்தது...

சிலேட்டில் சிலேடை எழுதியவனை
சீர்த்திருத்தியது ஒரு கரும்பலகை.
குற்றியலுகரத்திற்கு உதாரணம்
எழுதிட சொன்னது ஒரு சமயம்.
வேகமாய் சென்று
“எனக்கு தெரியாது” என எழுதி வந்தேன்.
நண்பர்கள் சிரித்தார்கள்,
ஐயாவோ வியந்தார்.

கரும்பலகையுடன்
கரும்பு நிமிடங்கள் அவை.
நானும் அவனை போல் மாறிவிட்டேன்,
வாழ்க்கை பல வண்ணங்களை
தெளித்து செல்கிறது...

Wednesday, 24 October 2012

அந்திவேளை

மழையும் வெயிலும்
சந்தித்துக்கொள்ளும்
ஒரு மாலைப் பொழுதில்
வெட்கம் போல பூத்திருக்கும்
வானவில்லை ரசித்திருக்கிறாயா நண்பா நீ...

சுற்றித்திரிந்த பறவைகள் கூட்டம்
கூடு திரும்பி
அன்றைய கதைகளை கதைக்கும்
கீச்சல்களை கேட்டிருக்கிறாயா நண்பா நீ...

அந்திவேளையில்
ஆடுமாடுகள் நடத்திடும்
அழகிய அணிவகுப்பை
கண் கொட்டாமல் பார்த்திருக்கிறாயா நண்பா நீ...

அகவும் மயிலின் நடனம்
அரங்கேறும் நேரம்
எதுவென அறிவாயா நண்பா நீ...

நிறமாலையின் வண்ணங்கள் எல்லாம்
நிறப்பிரிகை இல்லாமல்
விண்ணில் விரியும் விந்தையை
வியந்திருக்கிறாயா நண்பா நீ...

மஞ்சள் பூசியும் மறைக்கமுடியாமல்
வெட்கத்தில் சிவந்து நிற்கும்
குளத்து நீரையும், - அதில்
விளக்கில் ஏற்றிய சுடர் போல்
புதிதாய் மலர்ந்திருக்கும்
தாமரை மொட்டுக்களையும், - அதன்
உச்சியை இலக்காக வைத்து
தாவி குதித்தாடும்
கெண்டை மீன்களையும்
நேரம் போவதே தெரியாமல்
ரசித்திருக்கிறாயா நண்பா நீ...

களைப்பு கலந்த குறுநகையுடன்
கையில் காளையையும்,
தோளில் கலப்பையையும்,
சுமந்து வரும் உழவனின்
உடற்கட்டை வியந்து பார்த்திருக்காயா நண்பா நீ...

வீடு திரும்பும்
அப்பாவின் கால்களை
ஓடி சென்று கட்டிக்கொண்டிருக்கிறாயா நண்பா நீ...

பள்ளியிலிருந்து
சிறகை விரிப்பதுபோல்
கைகளை விரித்து
ஓடிவரும் பிள்ளையை
வாரி அணைத்திருக்கிறாயா நண்பா நீ...

ஊரையே கூப்பிடும்
அம்மாவின் அடை வாசனையுடன்
குளிருக்கு இதமாய்
உளுந்தங்கஞ்சியையும் உண்டிருக்கிறாயா நண்பா நீ...

தாத்தாவின் கால்களில்
அம்மா குளத்துல விழுறியா இல்ல
அப்பா குளத்துல விழுறியா என
வேட்டியில் தூழி ஆடியிருக்கிறாயா நண்பா நீ...

பாட்டியின் மடியில் படுத்து
பூத கதைகளை கேட்டு
பாதி கனவில் விழித்திருக்கிறாயா நண்பா நீ...

திடீரென ப்ராகாசிக்கும்
தெருவிளக்கை கண்டு
விரலுக்கு முத்தமிட்டு
சாமி கும்பிட்டிருக்கிறாயா நண்பா நீ...

விளையாட்டின் நேர்த்தியையும்
எழுத வேண்டிய வீட்டு பாடத்தையும்
வியந்து ரசித்த திரைப்படத்தையும்
நண்பனிடம் உவகையுடன் விவரித்திருக்கிறாயா நண்பா நீ...

கோவில் மதிலில் அமர்ந்து
தலைக்குனிந்து நடந்து வரும்
தாவணி தென்றல்களுக்கு
மதிப்பெண் இட்டிருக்கிறாயா நண்பா நீ...

அந்த பாவையின்
ஓரவிழி பார்வையின் பரவசத்தில்
பூக்கும் வெட்கத்தை
மறைக்க முடியாமல் திணறியிருக்கிறாயா நண்பா நீ...

மாடத்தில் அமர்ந்து
மனைவியுடன் அந்தரங்கம் பேசி
மதி மயக்கும் பாடல்களில்
லயித்ததுண்டா நண்பா நீ...

நந்தவனத்தை விட்டு
நகர்வலம் வந்துவிட்ட
உங்களுக்கு எப்படி தெரியும்
அந்திவேளையில் தான்
இப்பிறவியின் பலன் இருக்கிறதென்பது...

Tuesday, 23 October 2012

யாழிக்கு கவிதைகள்


நீ சிரிக்கும் போதெல்லாம்
முத்தமிட்டு என்னை
நிரப்பிட முடியாது என
என்னை ஏளனம் செய்கிறது
உன் கன்னக்குழி.
இன்னொரு வாய்ப்பு தாயேன்
இம்முறையாவது நிரப்பிட முயற்சிக்கிறேன்.

விழித்து பார்த்துவிட்டு
இழுத்தி போர்த்திகொண்டு உறங்கும்
புலர்ந்த காலைப் பொழுதின் உறக்கம் போல்
இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
உன்னை அணைத்திருக்கும் இந்த நொடிகள்.

என் தலையணையை
பலமுறை தாக்குகிறேன்
ஒருமுறையாவது
உன் மடியில் படுத்த சுகத்தை தா என்று
பலனே இல்லை.

Monday, 22 October 2012

யாழிக்கு கவிதைகள்


கைப்பிள்ளை காதல் என்கிறேன் – நீ
கைக்கிளை காதல் என்கிறாய்.

காவிய காதல் என்கிறேன்.
காவியங்களில் காதலர்கள்
இணைவதில்லை என்கிறாய்.

வாழ்ந்து காட்டுவோம் வா என்கிறேன்.
வேர்கள் இல்லாமல்
விழுதுகள் நிலைக்காது என்கிறாய்.

வலி இல்லாமல்
காதல் இல்லை என்கிறேன்.
வழியே இல்லை
தேடல் எங்கே என்கிறாய்.

காட்டாற்றுக்கு வழி
தேவை இல்லை என்கிறேன்.
காதலூற்றுக்கு மடை அதிகம் என்கிறாய்.

அணையிட்டு அடைத்தாலும்
அடங்காது காதல் என்கிறேன்.
அழகிய வார்த்தைகள்
வாழ்க்கைக்கு உதவாது என்கிறாய்.

என்னை என்ன தான்
செய்ய சொல்கிறாய் என்கிறேன்.
மறந்துவிடு என்கிறாய்.

இது என்ன
பெட்ரோல் டீசல் விலையேற்றமா
இரண்டு நாள் கழித்து மறப்பதற்கு...
காதலில் மறந்துவிடு
என்பதன் பொருள் என்ன தெரியுமா
மனதின் ஒரு மூலையிலிருந்து
தினம் வதைக்கும் வலி...

இப்படி பேசியே
எனை வீழ்த்திவிட்டாய் என்கிறாய்.
வீழ்வது தானே
காதலில் சுகம் என்கிறேன்.

இதற்குமேல் விட்டால்
பேசிக்கொண்டே இருப்பாய் என
இதழ் கோர்த்துவிட்டாய்.
கயவர்கள் ரசிக்கிறார்கள்
மறைவிடம் செல்வோம் வா...

*கைக்கிளை – நிறைவேறா காதல்.

Thursday, 18 October 2012

காதலழுத்த தாழ்வு நிலை


தமிழகத்தில் மழை பெய்தால் மண்வாசம் வருகிறதோ இல்லையோ இவர் வாசம் வந்துவிடும். சென்னை வானிலை ஆய்வு மைய தலைமை அதிகாரி திரு.ரமணன் அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

வங்க கடலில்
காற்றழுத்த தாழ்வு நிலை.
அங்க கடலில்
காதலழுத்த தாழ்வு நிலை.

வடகிழக்கு பருவமழை ஆரம்பம்
வானிலை அறிக்கை.
மனகிறுக்கு பித்துநிலை ஆரம்பம்
என்நிலை அறிக்கை.

தமிழகத்தில்
மிதமானது முதல்
கனமானது வரையிலான
மழை பெய்யும் வாய்ப்பு.
அவளகத்தில்
மிதமானது முதல்
கனமானது வரையிலான
முத்தம் பொழியும் வாய்ப்பு.

பிற பகுதிகளில் வானம்
மேக மூட்டத்துடன் காணப்படும்.
சில நேரங்களில் தேகம்
வெட்க மூட்டத்துடன் காணப்படும்.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
ஆடைகளுக்கு விடுமுறை
காதல் கலவித்துறை அறிவிப்பு.

கடந்த 24 மணிநேரங்களில்
புதுச்சேரியில் அதிகபட்சமாக
9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 நிமிடங்களில்
இதழ்ச்சேரியில் அதிகபட்சமாக
9 முத்தங்கள் பதிவாகியுள்ளது.

அடுத்த 48 மணிநேரங்களுக்கு
தமிழகத்தில் மழை நீடிக்கும்.
அடுத்த  48 வருடங்களுக்கு
என்னகத்தில் காதல் நீடிக்கும்.

Wednesday, 17 October 2012

INBOX


ஐ...! போன்னு...!! என வியந்த காலம் போயி, I phone da என அசால்ட்டாக சொல்லும் காலமாகிவிட்டது.

உறவுகளை பிரிக்கும் காரணிகளில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது செல்போன். அது பயன்ப்படுத்த படவில்லை என்றாலும், அது இருந்தாலே பிரச்சனை என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

FORWARD MESSGES ஆகவே அனுப்பிக்கொண்டிருந்த நண்பனை அழைத்து ஏன்டா..., வேற வேலையே இல்லையா, இப்பதான் MESSAGE அனுப்பிகிட்டு உக்காந்திருக்க என திட்டிவிட்டு ஃபோனை வைத்தேன். அப்போது தான் MESSAGE அனுப்பியே KEYBOARD தேய்ந்து போன பழைய நோக்கியா 1100 கண்ணில் பட்டது.

இதுல நூறு மெஸ்ஸேஜ் ஃப்ரீயா இருக்கு, யாருக்காவது அனுப்பி காலி பண்ணு மாப்ள என்று ஃபோனை தந்தார் மாமா. நான் யார் என்று சொல்லாமலேயே மெஸ்ஸேஜ் அனுப்பி நண்பனை கலாய்த்து கொண்டிருந்தேன். ஒருநாள் நண்பர்களுடன் உச்சக்கட்ட போதையில் இருக்கும் போது இந்த நம்பருக்கு கால் பண்ணி கன்னாபின்னானு திட்டுங்கடா என அவன், மாமா நம்பரை கொடுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொண்டு அவரை நார்நாராய் கிழித்து எறிந்தோம். மறுநாள் காலையில் நேத்து நீ திட்டுனது உங்க மாமாவடா என அவன் சொன்ன போது தான் எல்லாம் தெளிந்தது.

சமீபகாலமாக ஒரு மோசமான பழக்கத்தில் சிக்கி தவிக்கிறேன். கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களோடு இயைந்து என்னால் பேச முடியவில்லை என்றால், ஃபோனை எடுத்து நண்பர்களுக்கு மெஸ்ஸேஜ் அனுப்ப ஆரம்பித்துவிடுகிறேன். என்னடா பழக்கம் இது என்று அப்பா கூட இருமுறை கடிந்து கொண்டார்.

“நான் யாருனு சொல்லு பாப்போம்” இது தான் என் முதல் அழைப்பில் நண்பர்களுடன் பேசிய முதல் வார்த்தையாக இருந்திருக்கும்.
மச்சி ஸ்கோர் அனுப்புடா...

143...
Me too…
இவ ஏன் இப்ப இத அனுப்புறா என யோசித்துவிட்டு sent item எடுத்து பார்த்த போது தான் தெரிகிறது, நம்பர் மாத்தி அவன் தங்கச்சிக்கு அனுப்புனது.

எப்ப பாத்தாலும், மொபைல்ல பத்தி குறை சொல்லிக்கிட்டே இருக்கியே மொபைல் இல்லாம ஒருநாள் உன்னால இருக்க முடியுமா என நண்பன் கேட்டான். அடிக்கிற கை தான்டா அணைக்கும் என்று நான் சொன்னேன்.

இந்த G5 மொபைல் ரிங்டோன் கேட்டாலே மண்டைக்குள்ள “டொய்ங்”னு ஒரு சத்தம் கேக்குது. கற்றது தமிழ் பிரபா மாதிரி கோவம் வருது... பாத்து இருந்துக்கோங்க மக்களே...

25000 ரூபாய்க்கு SMART PHONE வாங்கி ஒரு அப்ளிகேசன கெத்தா காட்டுனா, 2500 ரூபாய்க்கு ஒரு சைனீஸ் செட் வாங்கி அந்த அப்ளிகேசன்ல அது நொட்ட, இந்த அப்ளிகேசன்ல இது சொட்டனு சொல்றவன என்னங்க பண்ணலாம்... 

Tuesday, 16 October 2012

எனக்கிது போதும்...


எதற்காக பிரிந்தோம் என்று
இன்னும் காரணமே
அறியப்படாத நிலையில்
உன் பிறந்தநாள் அன்று
இமைகளுக்குள் சிறகடிக்கும்
நினைவுகளை ரசிப்பதை விட
வேறு என்ன நான்
சிறப்பாய் செய்துவிட முடியும்.

உன்னை நினைத்த மாத்திரத்தில்,
குறுநகை ஒன்று
இதழோரம் துளிர்த்து,
இலை விழுந்த நீராய்
சலனம் செய்தது கன்னத்தில்.
என்னையே அறியாமல்
“குத்துது” என நீ ரசித்த
தாடியை தடவி பார்க்கிறேன் நான்.

அணிலாடும் முன்றிலில்
ஊடலாடிய பொழுதுகள்
நினைவாடி செல்கிறது
நீ மட்டும் இங்கு இல்லை.
உன்னை சந்திக்க விரைகிறேன்
ஒரு தயக்கம் வந்து
தகராறு செய்கிறது.
தகர்த்தெறிந்து உனக்காக
காத்து நின்றேன்.

தூரத்தில் நீ வருவது தெரிந்ததும்
உதிர்ந்த பின்னும்
சிரிக்கும் மன்றத்து பூக்களாய்
மலர்ந்துவிட்டேன் நான்.
இறுக்கமாக இரு,
சிரித்துவிடாதே என
பயிற்சி தந்ததையெல்லாம்
உன்னை பார்த்த மாத்திரத்திலேயே
மறந்துவிட்டது மனது.

நாம் காதலாடிய
இடத்தில் வைத்து
அணிலாடும் முன்றிலை
பரிசாய் தருகிறேன்.
பிரியும் நொடியில்
என் முத்த ஏக்கத்தை
எப்படி அறிந்தாயோ...
இறக்கும் வரை
மறக்காத தடமாய்
மனதில் பதிந்தது அது.
                எனக்கிது போதும்...