நான் பிறப்பதற்கு முன்பே சுவையாகிவிட்டது என் வாழ்க்கை.
நான் உருவாகிய போதே, ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருந்ததால் என்னை கலைக்க
திட்ட்மிட்டுவிட்டார்கள். பொம்பள புள்ளையா இருந்தாலும் இருக்கும் கலைக்க வேணாம்னு
எங்க அப்பாயி (அப்பாவோட அம்மா) தான் சொன்னுச்சாம்.. அதனால ஒரு அழகான ஜுலை மாதம்
4-ம் நாள் அன்று பிறந்தேன்...
பிறந்தது ஆண் குழந்த என்ன பண்றது வளர்க்க
ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க ஆசை பட்ட மாதிரி நான் பிறக்காததால என்ன ஆசையா அவங்க
வளர்க்கல.. அதுக்காக அப்பவே நான் வருத்தபடல.. பசிச்சா கூட அழுக மாட்டேனாம்.. கை
சப்பிக்கிட்டே படுத்து இருப்பேனாம்.. இப்பவும் அப்படி தான் யாராவது சாப்பிட
கூப்பிட்டாதான் சாப்பிடவே தோணும்.. தனியா சாப்பிட பிடிக்காது..
பிறக்கிறதுக்கு முன்னாடியே இப்படி யோசிச்சு பிறந்ததாலயோ
என்னவோ, எந்த ஒரு விசயத்துலயும் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாம குழம்பி
போயிடுறேன். அந்த மாதிரி சமயங்களில் எனக்கு உதவுவது டாஸ் போட்டு பாக்குறது தான்..
சிவாஜி படத்துல ரஜினி சார் பண்றத பார்த்துட்டு எனக்கும் அந்த பழக்கம்
தொத்திக்கிச்சு. அதுக்காகவே ஒரு ஒரு ரூபாய் காயின் ஒன்னு பையிலியே வைச்சிருப்பேன்.
அந்த காயின் எனக்கு POUL
ACTOPUS மாதிரி சரியான முடிவத்தான் கொடுத்திருக்கு..
ஆனா சென்னையில கழிஞ்ச மோசமான நாட்கள்ல அந்த காயின செலவு
பண்ணாம பாதுகாக்கிறதே ஒரு போராட்டமா போச்சு.. ஒரு மிக மோசமான நாள்ல் பேருந்து
பயணச்சீட்டிற்காக அத செலவழிச்சதும் வேதனை.. ஒரு காயின்காக அன்னைக்கி நான் நிரம்ப
வருத்தப்பட்டுட்டேன். அதுக்கு பிறகு எந்த காயினும் வச்சுகிறது இல்ல, கைல
கிடைக்கிறத வச்சு முடிவு எடுத்துகிறேன்.
நான் ரொம்ப வருத்தபடும் நாட்கள்.., என் சோகமான நாட்கள்..
என்ன யாராவது திட்டும் போது எங்க அப்பாயி பக்கத்துல இருந்துச்சுனா..
“என்ன அன்னைக்கே கலைச்சிருந்தா எனக்கு இதெல்லாம் நடந்து
இருக்காது-ல, கிழவி எல்லாமே உன்னால தான்” னு திட்டுவேன். என்ட அதிகமா திட்டு
வாங்கினது கிழவியா தான் இருக்கும், பாவம் கிழவி சாகறதுக்கு முதல் நாள் கூட திட்டு
வாங்கினுச்சு..
“யாரு கண்டா.. நீ பொட்ட புள்ளயா பிறந்து என் புள்ளைக்கி
சோறாக்கி போடுவனு நினைச்சேன்.. இப்படி ஆம்பள புள்ளயா பிறந்து கேள்வி கேப்ப னா..
நினைச்சேன்.. “ இப்படி சில சமயமும்..,
“போடா-னு ஆரம்பிச்சு வாய்க்கு வந்தபடி எல்லாம் வசவு
பாடியும்..,”
எதுவுமே பேசாம என் கருத்த ஏத்துக்கிற மாதிரி அமைதியாவும்
சில சமயம் அதன் பதில் இருக்கும்..
சரி பிறந்துட்டேன்.., எனக்கு பேரு வைக்கணுமே.. அதுல ஒரு
பெரிய காமெடியே பண்ணிருக்காங்க..
நான் பிறந்த சில தினங்களுக்கு பிறகு இலங்கை அரசவையில் ஈழ
தமிழர்கள் பொன்னம்பலம், யோகேஷ்வரன் என்ற இருவரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று
அமைச்சர்களாக பதவியேற்றனர்.
எங்க மாமாட்ட என்ன கொடுத்து எனக்கு பெயர் வைக்க
சொல்லிருக்காங்க எங்க அம்மா. அந்த அமைச்சர்களின் ஞாபகமா பொன்னம்பலம் னு வைக்க
சொல்லியிருக்கார்.
உன்ட போயி கேட்டேன் பாருனு தலையில அடிச்சுக்காத குறையா
எனக்கு எங்க அம்மா யோகேஷ்வரன் னு வச்சிருக்காங்க..
அவர் சொன்ன பேர் வைக்கலன்ற கோபமோ என்னவோ, இன்னைக்கி
வரைக்கும் என் பேர் சொல்லி அவரு கூப்பிட்டதேயில்ல..
மகேஷ்வரன், கமலேஷ்வரன், யோகேஷ்வரன்.. ஈஷ்வரன்லயே
முடிஞ்சதால அதுவே நிலைச்சுடுச்சு..
அதுவும் SCHOOL-ல JOIN பண்ற வரைக்கும்
தான்.. ALPHABETICAL
ORDER ல வரும் போது என் பேரு கடைசியா வந்ததால
பாலச்சந்தர் னு மாத்தி வச்சுட்டார் எங்க அப்பா..
குடித்துவிட்டு தாமதமாய் வரும் அப்பாவிற்காக
காத்திருக்கும் அம்மாவின் மடியில் உறக்கம் வராத பல இரவுகளில் சலிக்காமல் கேட்ட கதை
இது...
No comments:
Post a Comment